பொன்னியின்
செல்வன் ( 5 பாகங்கள்)
ஆசிரியர்:
அமரர் கல்கி
பதிப்பகம்
சாரதா பதிப்பகம்
ஏற்கனவே
நான் கல்கியின் புன்னைவனத்து புலி, ஒற்றை ரோஜா போன்ற சிறுகதைகளை படித்துள்ளேன். ஆனால்
பொன்னியின் செல்வன் அதிக பேரால் புகழப்பட்ட நாவல் என்றாலும் அதன் அதிக பக்கங்கள் காரணமாகவும்
ஐந்து பாகங்கள் காரணமாகவும் படிக்காமல் இருந்தேன்.
தற்சமயம்
ஊரடங்கினாலும் பொன்னியின் செல்வன் படமாக வர இருப்பதாலும் அதை படிக்க துவங்கினேன். படிக்க
துவங்கிய நாள் முதல் மிகவும் வேகமாகவே கதை சென்றது. கதை போக்கு கதையில் வரும் காவேரி
ஆற்றின் போக்கை போல நம்மை அடித்து கொண்டு இறுதி பக்கத்தில் நிறுத்துகிறது.
இடையில்
கல்கியின் சில விவரனைகள் வேகம் குறைந்த நீரோட்டத்தை போல மெதுவாக இழுத்து செல்கிறது.
அருள் மொழி வர்மன் காலத்தில் உள்ள கதைமாந்தர்கள் பற்றி அறிந்துக்கொள்ள மிகவும் வசதியாக
இந்த புத்தகம் இருக்கும்.
மொத்தத்தில்
தமிழில் பாகம் வைத்து இவ்வளவு அருமையான ஒரு கதையென்று இதைதான் நான் முதன் முதலாக படிக்கிறேன்.
இந்த கதையில் அருள் மொழி வர்மனை விட என்னை மிகவும் ஈர்த்த கதாபாத்திரங்கள் வந்திய தேவனும்
, ஆழ்வார்க்கடியார் நம்பியும் தான்.
எந்த
ஒரு சூழ்நிலையையும் அணுகி வெளிவரும் இவர்கள் இருவரின் யுத்திகளின் முன்னால் எந்த ஒரு
அரசாங்க ரகசியங்களும் முன்னால் நிற்காது. உண்மையில் கதாபாத்திரம் படி இவர்கள் இருவரும்
ஒன்று சேர்ந்தால் சோழ சாம்ராஜ்யத்தையே தன் வசப்படுத்தும் வல்லமை கொண்டவர்கள். ஆனால்
நிஜ வாழ்க்கையில் இப்படியான கதாபாத்திரங்கள் இருக்க வாய்ப்பில்லை. ஏன் எனில் கதையில்
வந்திய தேவன் எந்த ராஜ ரகசியங்களையும் தேடி செல்ல மாட்டான். பரந்து விரிந்த பாரதத்திலே
அனைத்தும் அவன் போகும் இடங்களிலேயே நடக்கும். நிஜ வாழ்க்கையில் எதர்ச்சையாகவே ஒருவனுக்கு
இப்படி அனைத்து விசயங்களும் நடக்க வாய்ப்பில்லை என்பதாலும் கதையே கற்பனை கதை என்பதாலும்
இந்த கதாபாத்திரங்களிடம் லாஜிக் பார்க்க கூடாது.
கதையின்
எழுத்து நடை மிகவும் பாராட்டத்தக்கது . கல்கியின் எந்த ஒரு கதையும் அவர் எழுதும் நடை
நம்மை இறுதிப்பாகத்திற்கு கொண்டு செல்லும். இந்தியாவில் எழுதப்பட்ட துப்பறிவு கதைகளில்
சத்யஜித்ரேவின் பெலுடா கதைகள் என்னை மிகவும் ஈர்த்தவை . அதன் பிறகு அதற்கு இணையாக ஒரு
துப்பறியும் கதையை படித்தேன் என்றால் அது கல்கியின் புன்னை வனத்து புலியாகதான் இருக்கும்.
அதனாலே கல்கியின் எழுத்துக்கள் மீது எனக்கு அசாத்திய நம்பிக்கை உண்டு.
எப்போதும்
விமர்சனம் எழுதும்போதும் கதையை வெளியிட்டு மக்களுக்கு எந்த ஸ்பாய்லரையும் கொடுக்க கூடாது
என்று நான் கதைக்குள் செல்வதோ கதையை பற்றிய வர்ணனையோ கொடுப்பது கிடையாது. இதிலேயும்
வாசகர்கள் கதையை படித்து தெரிந்துக்கொள்வதே நல்லது என நினைக்கிறேன்.
மொத்தத்தில்
தமிழில் ஒரு கேம் ஆஃப் த்ரோன்ஸ் தான் பொன்னியின் செல்வன். நீங்கள் கற்பனை நாவல்கள்
மூலம் உலகை சுற்ற ஆசைப்படுபவராய் இருக்கும் பட்சத்தில் பொன்னியின் செல்வன் உங்களுக்கு
நல்ல விருந்தளிப்பார் என்பது உறுதி.
இதில்
எனக்கு பிழையாகப்பட்ட சில விஷயங்களை கூறி ஆக வேண்டும்.
கல்கி
பிராமணியத்தை அதிகமாக கலந்து இருந்தது கதையின் ஓட்டத்தில் இடை இடையே இடையூறு செய்யும்
சம்பவமாக அமைந்தது. கோவில் பெருமைகள் , பழைய இதிகாசங்களின் பெருமைகளை அங்கங்கு பேசும்
போது திரைப்படத்தில் முக்கியமான கட்டத்தில் பாடல் ஓடும்போது கடுப்பாகும் அல்லவா அப்படி
ஆகி விடுகிறது. உதாரணமாக ஆழ்வார்க்கடியான் நம்பி இருவரை பின்பற்றி உளவு பார்க்க செல்வார்
அவர்கள் பாண்டிய நாட்டை சேர்ந்தவர்கள் சதி திட்டம் தீட்ட ஒரு இடிந்த கோவில் அருகே கூடுவார்கள்.
அவர்கள் கூடிய இடத்திற்கு மேலே மரத்தில் ஆழ்வார்க்கடியான் நம்பி அவர்களுக்கு தெரியாமல்
ஒளிந்திருப்பார்.
இந்த
நேரத்தில் கதையை அங்கேயே நிறுத்தி வைத்துவிட்டு இடிந்த கோவிலின் வரலாற்றை கூற துவங்கி
விடுவார் கல்கி. இவை எல்லாம் ஒருவேளை எனக்கு மட்டும் சங்கடம் தரும் சங்கதியாக இருந்திருக்கலாம்.
அதே
போல் அரச குலத்தார் எனப்படும் சத்திரியர்களை மிகவும் பெருமைப்படுத்தி பேசியிருந்தார்.
அதற்காக மற்றவர்களை மறைமுகமாக இகழ்ந்தும் இருந்தார். அதற்கு உதாரணமாக அரச குலத்தில்
பிறந்த நந்தினி கீழான வேலைகள் செய்யும்போது “மேன்மை பொருந்திய அரச குலத்தில் பிறந்தாலும்
நந்தினி வளர்ந்த சூழ்நிலையால் அவள் இப்படி இருப்பதாக கல்கி கூறுவார்.” அந்த இடத்தில்
அரச குடும்பத்தின் மேல் கறை விழக்கூடாது என்பதில் கல்கி தெளிவாக இருந்தது தெரிந்தது.
அரச குலத்தில் உள்ளவர்கள் மேன்மை பொருந்தியவர்கள் என்பதால் வானதி , குந்தவை காட்டப்பட்ட
அளவு புனிதமாக படகோட்டி பூங்குழலியை காட்டவில்லை என்றாலும் அதற்காக இறுதியில் நல்ல
தீர்வு தந்தது மன மகிழ்ச்சி அளித்தது. அதை கூறினால் ஸ்பாய்லர் ஆகிவிடும்.
இந்த
விசயங்களை தாண்டி பொன்னியின் செல்வன் ஒரு அருமையான நாவல்.
இதை
படிக்கும் வாசகர்களிடம் முக்கியமான ஒரு விஷயத்தை கூற விரும்புகிறேன்.
அரச
காலத்தின் ஆதிக்க அடிமை முறையில் இருந்து நம்மை நாமே மீட்டு கொள்ளதான் நாம் மக்களாட்சி
என்ற முறையை கொண்டு வந்தோம். அரசியல் வாதியை தேர்ந்தெடுக்கும் முறை நம் கையில் உள்ளபோதே
அவர்கள் நமக்கு எவ்வளவோ தீங்கு இழைக்கையில் அரச காலத்தில் அரசர்கள் சர்வதிகாரியாகவே
இருந்திருப்பர் என்பது நிச்சயம்.
அளவுக்கு
மிஞ்சிய அதிகாரம் உள்ள அரசர்கள் சர்வதிகாரிகளாகவே இருந்திருப்பர். அப்போது மக்கள் பட்ட
கொடுமைகள் அவர்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கும். அதிக அதிகாரம் கொண்ட போலிஸ் அதிகாரியே
அத்து மீறும்போது ஒரு நாட்டையே ஆளும் அரசன் , அவனை யாரும் கேள்வி கேட்க முடியாது எனும்போது
அவன் சர்வதிகாரியாக இருப்பது இயல்புதான். இப்போது நமக்கு அந்த துன்பங்கள் வாய்க்கவில்லை.
அதை நினைத்து சந்தோஷப்படுவோம்.
கல்வெட்டுகளில்
செதுக்கப்படும் வரலாற்றுகள் அனைத்தும் உண்மை கிடையாது முக்கியமாக அரசர்களை பற்றிய கல்வெட்டு.
ஒரு அரசன் தன்னை பற்றி மிகைப்படுத்தி பாடுவதற்குதான் புலவனுக்கு பொருள் கொடுக்கிறான்.
அவன் எவ்வளவு கொடியவனாக இருந்தாலும் புலவர்கள் வரலாற்றில் அவனை புக்ழ்ந்து எழுதி பரிசில்
பெற்று செல்வர். அப்படியிருக்கையில் ராஜ ராஜ சோழனும் அதே போலத்தான் எழுதி இருப்பார்.
தன்னை பற்றி கல்வெட்டு மூலமாக வரலாற்றில் பதிக்கும் அவர் அதில் தான் செய்த தவறுகளை
எழுதமாட்டார் . வேண்டுமானால் இன்னும் மிகைப்படுத்தியே புலவர்கள் எழுதி இருப்பர்.
எந்த
புலவர்களும் சாதரண குடி மக்களில் ஒருவனை புகழ்ந்து பாடியதில்லை. உயர்குடியை சேர்ந்தவனையோ
அல்லது கடவுளையோ தான் புகழ்ந்து எழுதி உள்ளனர். இதனால் வரலாற்றில் புனைவுகள் அதிகம்
இருக்கும். இப்போது 23 ஆம் புலிகேசியின் படம் வரையும் காட்சி உங்களுக்கு ஞாபகம் வந்தால்
அதற்கு கம்பெனி பொறுப்பேற்காது.
அந்த
வரலாற்றுகளை படித்து அவற்றோடு தனது கற்பனையும் சேர்த்து எழுதப்பட்ட கதைதான் பொன்னியின்
செல்வன்.
எனவே
இந்த கதையை ஒரு சரித்திர கற்பனை நாவல் என சொல்லலாம். கதையில் வரும் கதை மாந்தர்கள்
நிஜமாக வாழ்ந்தவர்கள். மற்ற எதுவும் எந்த அளவு உண்மை என்பது கல்வெட்டுக்களை எழுதிய
சிற்பிகளுக்குதான் தெரியும்.
இந்த
நிலையில் பலர் பொன்னியின் செல்வனை வரலாற்று ஆவணமாக பேசுவதாக அறிந்தேன். இதை ராஜ ராஜ
சோழனின் வாழ்க்கை வரலாற்றை போல் அவர்கள் பேசி வருகின்றனர். இதில் கூறப்பட்டவை அனைத்தும்
உண்மை என கூறி வருகின்றனர்.
ராஜ
ராஜ சோழனை மேன்மைப்படுத்துவதோ தாழ்த்தி பேசுவதோ எனது நோக்கம் அல்ல. அவரை ஒரு சமூகம்
தூக்கி பிடிப்பதும் அதற்கு இந்த புத்தகத்தை பயன்படுத்துவதையும் பார்க்கும்போதுதான்
சர்வாதிகார அரசாட்சியின் மீதுள்ள கோபம் ராஜ ராஜன் மீதும் பாய தொடங்குகிறது.
அதனால்
படிப்பவர்களுக்கு கூறி கொள்வதெல்லாம் ஒரு நாவலாக மட்டுமே பொன்னியின் செல்வனை அணுகுவது
நல்லது. இது ஒரு கதை என்ற அளவில் இதை படிப்பவர்களுக்கு இது சுவாரஸ்யமான அனுபவத்தை தரும்
நன்றி.
ராஜ்குமார்.

Comments
Post a Comment