பெண் விடுதலை ஒரு புதிய தரிசனம்
ஓஷோ
பெண் விடுதலை குறித்து இதற்கு முன்பு
படித்த புத்தகங்களை காட்டிலும் அதிகமான தகவல்களையும், விவாதங்களையும் எனக்கு
ஏற்படுத்திய ஒரு புத்தகம் என இதை கூறலாம். 1930 இல் இருந்து 1990
வரை வாழ்ந்த மனிதர் ஓஷோ. ஆனால் அவரது வாதங்கள், விஷயங்கள் யாவும் இப்போதைய தலைமுறைகளை கூட தாண்டி செல்வதாய் இருக்கிறது.
சமூகத்தில் இதுவரை கட்டி வைத்துள்ள
அனைத்து விதிமுறைகளையும் சல்லி சல்லியாக நொறுக்குகிறார் ஓஷோ. பெண் விடுதலை ஒரு
புதிய தரிசனம் என்பது இந்த புத்தகத்திற்கு ஒரு பொருத்தமான பெயர் எனலாம். பெண்
விடுதலை குறித்து நாம் இதுவரை படித்ததில் இருந்து முற்றிலுமாக வேறுப்பட்ட ஒரு
புத்தகம் இது. இப்போது புத்தகத்தில் ஓஷோ உடைத்த பர்னிச்சர்களை பார்க்கலாம்.
பெண்ணுக்கு முதலில் கிடைக்க வேண்டிய
சுதந்திரம், காமம்
ரீதியான சுதந்திரம். உடலுறவை பொறுத்தவரை பெண்கள் இன்னமுமே அடிமைப்படுத்தப்பட்டு
இருக்கின்றனர். ஓஷோ, அவரது காலத்தில் பல பெண்கள் உச்சம்
அடைவதை பற்றி அறிந்திருக்கவே இல்லை என கூறுகிறார். ஏனெனில் ஆண், பெண்ணை கண்டு பயப்படுகிறான். இயற்கையாகவே பெண்களால் வரிசையாக பல முறை
உச்சத்தை அடைய முடியும். அதே சமயம் ஆண்களால் ஒரு முறை மட்டுமே உச்சத்தை அடைய
முடியும். பிறகு ஆண்கள் சோர்ந்து விடுகின்றனர்.
இதைப்பற்றி ஓஷோ கூறும்போது “சில உண்மைகளை
நினைவில் கொள்ள வேண்டும். முதலாவதாக ஒரே ஒரு தடவை உச்சத்தை அனுபவிக்கவே ஆணுக்கு
சக்தி உள்ளது. அல்ல பன் முறை உச்சம் அனுபவிக்கும் திறன் பெண்ணுக்கே உள்ளது. இது
ஒரு மாபெரும் பிரச்சனையைத் தோற்றுவித்துள்ளது. திருமணமோ ஒருத்தி முறையோ அவர்கள்
மீது சுமத்தப்பட்டிராவிட்டால் எந்தப் பிரச்சனையும் இருந்திருக்காது. இது
இயற்கையின் உள் நோக்கம் எனத்தோன்றுகிறது. பெண்ணுக்கு ஒரு தடவை உச்சத்தை தூண்டி
விட்டால் மேலும் அரை டசன் உச்சங்களைப் பெற அவள் தயாராகி விடுவாள். அந்நிலையில்
அவளைத் திருப்திப்படுத்த தன்னால் இயலாமல் போகும் என்ற எளிய காரணத்தாலேயே பெண்ணைக்
கண்டு ஆண் பயப்படுகிறான்.
இரண்டாவதாக ஆணின் காமம் ஒரு குறிப்பிட்ட
இடத்திலுள்ளது. ஆண்குறியோடு முடிவது. பெண்ணின்கதை அப்படியல்ல. அதாவது காமம்
இன்பஉணர்வு அவள் உடல் முழுவதிலும் பரவிஉள்ளது. அவளுக்கு சூடேற அதிக நேரம் ஆகும்.
அவளுக்கு உணர்ச்சி ஏற்படத் தொடங்கும் முன்பே ஆண் முடிந்து விடுகிறான். அவளுக்கு
முதுகைக் காட்டிக் கொண்டு குறட்டை விடத் தொடங்குகிறான். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக
கோடிக்கணக்கான பெண்கள் உலக முழுவதிலும் உச்சகட்ட பரவசம் என்னும் மாபெரும்
இயற்கையின் வரத்தை அறியாமலேயே வாழ்ந்து மடிந்திருக்கிறார்கள். ஆணின்
அகங்காரத்துக்கு இது பாதுகாப்பானது. பெண்ணுக்கு நீண்ட நேர சரசம் தேவைப்படுகிறது.
அப்போதுதான் அவளின் முழு உடம்பும் உணர்ச்சியில் துடிக்கும் ஆனால் அதில் ஒரு அபாயம்
உள்ளது. அதாவது பன்முறை உச்சகட்டத்தை அடையும் அவளது திறனை என்ன செய்வது?
அறிவியல் ரீதியாகப் பார்த்தால் இரண்டு வழிகள் உள்ளன
ஒன்று உடலுறவை கவலைப்பட வேண்டிய விசயமாகி ஒழுக்க சம்பந்தமான விசயமாகக் கொள்ளக்
கூடாது. பெண்ணுக்கு அவளால் முடிந்த அளவு உச்சத்தை அவள் அடையும் படிக்கு ஆண்
நண்பர்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். அல்லது இதற்கென ஏதாவது விஞ்ஞான சாதனத்தைப்
பயன்படுத்த வேண்டும் ஆனால் இரண்டிலுமே பிரச்சனைகள் உள்ளன. அறிவியல் கருவிகளைப்
பயன்படுத்தினால் பெண்ணால் இயலக் கூடிய அத்தனை தடவைகளிலும் அவளுக்கு அவை உச்சங்களை
உண்டாக்கிவிட முடியும். ஆனால் ஒருதடவை பெண் இதை அறிந்துகொண்டால் பின் ஆணின்
உறுப்பு அற்பமாகத் தோன்றும். ஒரு தோழனுக்கு பதிலாக அறிவியல் கருவியையே அவள்
விரும்பித் தேர்ந்தெடுக்கலாம். உங்களுடன் சேர்ந்து கொள்ள சில ஆண் நண்பர்களை
நீங்கள் அனுமதித்தாலோ அது சமுதாயத்தில் அவதூறு கிளப்புகிறது நீங்கள் காமக்
களியாட்டங்களில் திளைப்பதாக.
எனவே தான் பெண்ணுடன் உடலுறவு கொள்ளும்போது பெண்ணானவள்
அசையக்கூடக் கூடாது சவம்போல் கிடக்க வேண்டும் என்ற மிக எளிய வழியை ஆண்
கண்டுபிடித்தான். ஆணின் வெளி யேற்றம் இரண்டு நிமிடம் அதிகபட்சம் மூன்று
நிமிடத்தில் என சீக்கிரமே முடிந்துவிடும். அந்த குறுகிய காலத்தில் பெண் தான்
இழந்துவிட்டது எது என்பதைப் பற்றிக்கூட அறிந்திருக்க மாட்டாள்.”
திருமணம்
திருமணம் என்பதே பெண்ணை அடிமைப்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஏற்பாடு என்கிறார் ஓஷோ.
குடும்ப பாரத்தை தலையில் சுமத்துவதன் மூலமும், குடும்பத்திற்கான
பொறுப்பை அவளிடம் அளித்ததன் மூலம் நாம் மிக எளிதாக அவர்களை
அடிமைப்படுத்திவிட்டோம். எனவே ஓஷோ திருமணத்திற்கு எதிரானவராக இருக்கிறார்.
திருமணம் உள்ளவரை பெண் அடிமைத்தனம் ஒழியாது என்பது அவரது கருத்தாக உள்ளது.
“வேட்டைச் சமுதாயத்தில் திருமணம் இருக்கவில்லை. சமுதாயம்
விவசாய சமுதாயமாக மாறும்போதுதான் திருமணம் என்பது உருவானது. விவசாயம்
தொடங்கியதும்தான் நிலம் வருகிறது. உடைமைகள் வருகின்றன. தன் மகன்களே தன் நிலத்தை
சுவீகரித்துக்கொள்ள வேண்டும்/ வாரிசாக வேண்டும் என்ற ஆணின் கருத்து வருகிறது. ஆகவே
உண்மையில் திருமணம் என்பது தனி உடைமையின் ஒரு உடன் விளைவுதான். பெண்ணை ஒரு தார
முறைக்கு உட்படுத்துவதே, உங்கள்
மகன் உங்களுடையவன்தான் என்பதை உறுதி செய்து கொள்வதற்கான ஒரே வழியாக இருந்தது.
பண்டைக்காலங்களைச் சேர்ந்த அக்கதைகள், வேட்டையிலிருந்து
விவசாயத்துக்கு சமுதாயம் உருமாறிக் கொண்டிருந்த அந்த ஆயிரக்கணக்கான ஆண்டுகளில்
நடந்த கதைகளாகும். விவசாயம் உறுதியாக நிலைநிறுத்தப்பட்டதும் கிழக்கிலும் பெண்
சுதந்திரத்தை இழந்தாள். ”
ஆனால் ஒருவேளை
நீங்கள் திருமணம் செய்ய விரும்பினால் அதற்கும் சில வழிமுறைகளை ஓஷோ வழங்குகிறார்.
“சமுதாயத்துடனான
விளையாட்டில் நீங்கள் சேர்ந்துகொள்ள விரும்பி னால். ஒதுங்கி தனியாக நிற்க
விரும்பாவிட்டால், உங்கள் மனைவி விடமோ கணவரிடமோ இந்த
திருமணம் வெறும் விளையாட்டுதான். என்பதை தெளிவாக்கி விடுங்கள்: ''ஒருபோதும் இதை பிரச்சனைக் குரியதாக எடுத்துவிடாதே. திருமணத்துக்கு முன்பு
இருந்த மாதிரியே நான் சுயேச்சையாகத்தான் இருப்பேன். நீயும் திருமணத்துக்கு முன்பு
இருந்தது போலவே சுயேச்சையாக இரு. உன் வாழ்வில் நான் குறுக்கிடப் போவதில்லை. என்
வாழ்வில் நீ தலையிடப் போவதில்லை. நாம் நண்பர்களாக சேர்ந்து வாழ்வோம். நம்
சந்தோசத்தை. சுதந்திரத்தை பகிர்ந்து கொள்வோம் - ஒருவர் மற்றவருக்கு பாரமாக
மாறமாட்டோம்.''
எந்த கணத்தில் வசந்தம் ஓய்ந்துவிட்டதாக. தேனிலவு
தேய்ந்து விட்டதாக நாம் உணர்கிறோமோ அக்கணமே, மேற்கொண்டு நடிக்கத்
தொடங்காத அளவுக்கு ஒருவரிடம் ஒருவர் பின்வருமாறு சொல்லி விடுமளவுக்கு நேர்மையாக
இருப்போம்: நாம் நிரம்ப காதலித்தோம். என்றென்றும் ஒருவருக்கொருவர் நன்றியுடன்
இருப்போம். நாம் காதலித்த நாள்கள் பொன்னான நாள்களாக நம் நினைவுகளிலும் கனவுகளிலும்
நம்மைத் தொடர்ந்து வரும். ஆனால் வசந்தம் முடிந்து விட்டது. நாம் பிரிய வேண்டிய
இடம் வந்துவிட்டது. இது வேதனையாக இருந்தாலும் இனியும் நாம் சேர்ந்து வாழ்வது
அன்பின் அடையாளமாக இராது.நான் உன்னை காதலித்தால். என் காதல் உனக்கு துன்பமாக
மாறிவிடுவதை கண்ட அக்கணமே நான் உன்னை விட்டு நீங்கிவிடுவேன். நீ என்னை
காதலித்தால். உன் காதல் எனக்குச் சிறையாக மாறுகிறது என்பதை நீ காணும் அக்கணமே நீ
என்னை விட்டு நீங்கிவிடுவாய். " - ஓஷோ
அன்பே வாழ்வின் உன்னத மதிப்பீடாகும்.
நீங்கள் நேசிக்கும் ஆளுக்கே சுதந்திரம் வழங்க
உங்களால் முடியாவிட்டால் வேறு யாருக்குத்தான் சுதந்திரம் வழங்கிவிடுவீர்கள்.”
பெண்ணிய அமைப்புகள்
ஏனோ தெரியவில்லை ஓஷோ அவர் இருந்த
காலக்கட்டத்தில் பெண்ணிய அமைப்புகளுக்கு எதிராக இருந்துள்ளார்.
”பெண்ணிய அமைப்புகளை
அதிகமாக விமர்சித்துள்ளார். இதுப்பற்றி அவர் கூறும்போது பெண்கள் அவர்களின்
சுதந்திரத்தை எப்படி அடைவது, அதற்கு என்ன செய்யலாம் என்பதை
பற்றிய விவாதமே பெண்ணிய அமைப்புகளில் இருந்திருக்க வேண்டும்.
மாறாக பெண்ணிய அமைப்புகள் காலம் காலமாக
ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே ஒரு நிரந்தர பகையை உருவாக்கி வருகிறது. வரலாறு
முழுவதும் ஆண் என்பவன் பெண்ணை பல கொடுமைகள் செய்துள்ளான். அவளை கேவலமானவள் என்றும்
இழி பிறவி என்றும் பேசி வந்துள்ளான். அதற்கு பழி தீர்க்கும் விதமாக பெண்கள்
தற்சமயம் ஆணை கேவலமானவன் என்றும் இழி பிறவி என்றும் பேசுகின்றனர். ஆனால் இதன்
மூலம் ஆண் பெண் இருவரும் என்றென்றைக்கும் எதிரிகளாகவே இருக்க போகிறார்கள். ஆனால்
ஒரு பெண்ணும் ஆணும் நண்பர்களாக அன்புடன் வாழ்வதற்கான எதையும் பெண்ணிய அமைப்புகள்
செய்ததாக தெரியவில்லை என்கிறார்.
அதாவது இரண்டு நாடுகளுக்கு இடையே
சமாதானம் ஏற்படுத்த வந்த தூதுவனே பெரும் போரை கிளப்பி விட்ட கதையாக இது உள்ளது.”
நம்மை சுற்றி இருக்கும் சுவர்
விவசாய குடிகளாய் ஆன பிறகு ஆண் பெண்ணை
அடிமைப்படுத்தினான். இதனால் ஆணும் கூட பல விஷயங்களில் அடிமை ஆனான். சமூகம்
நாகரிகம் என நம்மை சுற்றி பல சுவர்களை எழுப்பிக்கொண்டோம். இவற்றையெல்லாம் தகர்த்து
விட்டால் அனைவராலும் ஒரு சுதந்திரமான வாழ்க்கையை வாழ முடியும் என்பது ஓஷோவின்
எண்ணமாக இருக்கிறது.
அவர் கூறும்போது “ஒவ்வொருவரும்
ஒரு மூடுண்ட வாழ்க்கையையே வாழுகிறார். பயத்தினால் - அம்பலப்பட்டு விடுவோம் என்ற
பயத்தினால், அடிபட்டு விடுவோம் என்ற பயத்தினால்
தம் வெறுமையான நிலை பற்றிய பயத்தினால் - தன்னை மறைத்துக்கொண்டே போகிறார். தன்னைச்
சுற்றிலும் சுவருக்கு மேல் சுவர்களை எழுப்பிக்கொண்டே போகிறார்” என்கிறார்.
இந்த
சுவர்கள்தான் விருப்பப்பட்ட போதும் ஒரு பெண்ணும் ஆணும் எந்த வித பந்தமும் இல்லாமல்
சேர்ந்து வாழ்வதை தடுக்கிறது.
LGBTQ+
ஆண்
பெண்ணின் குண நலன்கள் பற்றி பேசும்போது தன்பாலின ஈர்ப்பு என்பது இயற்கையாகவே
அனைவருக்கும் இருக்கும் ஒன்று என்கிறார். இந்த சிந்தனையில் நம்மையெல்லாம் விஞ்சி
இருக்கிறது ஓஷோவின் சிந்தனை. வருங்காலத்தில் தனது பாலினத்தை மாற்றி கொள்ளும்
வாய்ப்பு இருந்தால் நாம் நமது பாலினத்தை அடிக்கடி மாற்றி கொண்டு விளையாடுவோம் என
கூறுகிறார்.
”ஆண் பெண் இருபாலருக்குமே ஆண் மற்றும் பெண்ணின் குண நலன்கள் இருக்கிறது.
பெண்ணுக்குள் ஆண் குணமும், ஆணுக்கு பெண் குணமும் சிறிது
அளவாவது இருக்கும்.
வரும் நூற்றாண்டில் கோடிக்கணக்கான
மக்கள் தம் பாலை மாற்றிக் கொள்வார்கள். அது ஒரு புதுவித சுதந்திரமாக இருக்கும்.
இரண்டு உலகங்களையும் நீங்கள் பெறமுடியும் என்கிறபோது ஏன் உங்கள் வாழ்க்கை
முழுவதும் ஆணாக மட்டுமே இருக்கவேண்டும்? உங்களுக்கு
வசதிப்பட்டால் நீங்கள் உங்கள் பாலை மாற்றிக்கொள்ள முடியும். சில ஆண்டுகளுக்கு
நீங்கள் ஆணாக இருக்கிறீர்கள். ஆணின் நோக்கிலிருந்து உலகைப் பார்க்கிறீர்கள். பின்
ஒரு சிறு அறுவை செய்து கொள்கிறீர்கள். உடனே பெண்ணாக மாறிவிடுகிறீர்கள். இப்போது
பெண்மைக் கண்கொண்டு உலகை நீங்கள் பார்க்கமுடியும். இப்படி பல தடவைகள்
மாற்றிக்கொள்வது சாத்தியமே. இதற்கான வழிமுறை மென்மேலும் எளிமையாகி விட்டால்... இது
மிக எளிமையாகவே போகிறது - அதுதான் அறிவியலின் முழு வேலையுமே; எல்லாவற்றை யும் மேலும் மேலும் எளிமையாகச் செய்வது - அந்த வழிமுறை மிகவும்
எளிமையாக ஆகிவிட்டால், கோடிக்கணக்கானவர்கள் பால் மாறவே
செய்வார்கள்.” - ஓஷோ
காதல்
காதலை
மிகவும் சிக்கலான அம்சமாக இங்கு பலரும் பார்த்து வருகிறோம். பூவே உனக்காக படத்தில்
வருவது போல ஒருவருக்கு ஒரு முறைதான் காதல் வரும் என கூறுகிறோம். ஓஷோ இதற்கு மாறான
கருத்துக்களை கொண்டுள்ளார். காதல் நிலையானது அல்ல என்பது ஓஷோவின் கருத்து. 1930
களில் பிறந்த ஒரு மனிதனுக்கு இந்த அளவிற்கு தீர்க்கமான பார்வை
இருப்பது ஆச்சரியமாகவே இருக்கிறது.
”காதல் ஒரு நிரந்தரப் பொருள் அல்ல - உயிருள்ள எதையும் போலவே அதுவும்
மாறுகிறது. எனவே எவரையும் குறை கூறுவதற்கில்லை. காதல் என்பது நிரந்தரமான ஒன்று;
நிரந்தரமாக இல்லாவிட்டால் அது உண்மைக்காதல் அல்ல என்னும் கருத்தை
குறிப்பாக கவிஞர்கள் இதுவரை மனிதகுலத்துக்கு ஊட்டி வந்திருக்கி றார்கள். ஆனால்
உண்மையற்ற காதல் மட்டும்தான் நிரந்தரமாக இருக்க முடியும் என்னும் விசயத்தை நான்
தெளிவாக்க விரும்புகிறேன். உண்மைக்காதல் ஒருபோதும் நிரந்தரமாயிருக்க முடியாது. அது
வசந்தத்தைப் போல வந்து போகிறது. சிந்திவிட்ட பாலுக்காக நொந்து அழ தேவையில்லை.
இன்னொரு இணையைத் தேட ஆரம்பிக்கலாம்.
உங்கள்
வாழ்வில் எவ்வளவு அதிகமான காதலர்களை நீங்கள் பெற்றிருப்பீர்களோ அவ்வளவுக்கு உங்கள்
அனுபவம் வளமாக இருக்கும். ஏனென்றால் எந்த இரண்டு பெண்களும் ஒரேமாதிரி
இருப்பதில்லை. எந்த இரண்டு ஆண்களும் ஒரேமாதிரி இருப்பதில்லை. இணையை மாற்றிக்கொண்டே
இருப்பது நல்லதுதான் - ஒரே ஆளுடன் ஒட்டியபடி இருப்பதே பெருமளவான அவலத்திற்குக்
காரணமாகும். காதல் போயின பின்பும் தொடர்ந்தும் அதே ஆளுடன் வாழ்வது என்பது
விபச்சாரமே தவிர வேறில்லை…” - ஓஷோ
ஆண்களால்
உருவாக்கப்பட்ட உலகம்
இந்த
சமுதாயம் முழுக்கவே ஆண்களால் ஆண்களுக்காக உருவாக்கப்பட்டது என்கிறார் ஓஷோ. இங்கு
பெண்கள் பல விஷயங்களுக்காக போராடி வெற்றி பெற்றாலும் கூட குடும்ப சுமையை அவர்கள்
மீது நிகழ்த்தி அவர்களை அடிமையாக வைத்திருக்கவே ஆண் விரும்புகிறான். இந்த ஆண்
சமூகத்தை உடைத்தெரிவதற்கான எந்த ஒரு வாய்ப்பையும் பெண்ணுக்கு அவன் வழங்க மாட்டான்.
முன்பை விடவும் இப்போது பெண்கள் அதிக விடுதலை பெற்றிருப்பதாக எண்ண வைப்பதன் மூலம்
அவர்களை நிறைவு காண வைக்கிறான். ஆனால் உண்மை அப்படி இல்லை. ஒரு வேளை உண்மையாக பெண்
விடுதலை நடந்திருந்தால் அமெரிக்காவில், இந்தியாவில்
இதுவரை அதிபர் ஆனவர்களில் ஆண்கள் அதிகமா? பெண்கள் அதிகமா?.
இந்த கேள்விக்கு விடை தேடும்போது நமக்கு தெரியும் ஆண் உருவாக்கிய
சமூகத்தில் இன்னும் அவன் அதிகார பொறுப்புகளை பெண்களுக்கு தர தயாராயில்லை என்பது.
தமிழகத்திலும் கூட எத்தனை பேர் பெண் முதல்வர்கள் இருந்தார்கள். இப்போதை கட்சிகளில்
எத்தனை கட்சிகளில் பெண்கள் கட்சி தலைவர்களாக இருக்கிறார்கள் என்ற கேள்வி
புத்தகத்தை படிக்கும்போது நமக்கே எழுகிறது.
எனவே
இது ஆண் உருவாக்கிய சமுதாயம். இதை எதிர்த்து நிற்க இந்த பொறுப்புகளை பெண்கள் பெற
வேண்டும் என ஓஷோ கூறுகிறார். ஆனால் பெண்ணிய அமைப்புகள் இதை பற்றிய வாதத்தை பேசாமல்
வெறுமனே ஆண்களை திட்டுவதையும் இருவருக்கும் இடையே விரோத போக்கை ஏற்படுத்துவதுமே
பெண்ணிய அமைப்புகளின் வேலையாக இருக்கிறது என ஓஷோ கூறுகிறார்.
இப்படி
பல விஷயங்களை பேசும் ஒரு முக்கியமான புத்தகம்தான் பெண் விடுதலை ஒரு புதிய தரிசனம்.
இந்த புத்தகத்தில் என் கருத்துக்கு மாறான பல விஷயங்கள் இருந்தன. ஆனால் அவை சரியா? தவறா? என்கிற முடிவிற்கு என்னால் வர இயலவில்லை.
ஏனெனில் நான் இன்னும் ஓஷோ அளவிற்கு கருத்து ரீதியான முதிர்ச்சியை அடையவில்லை.
உங்களுக்கும் கூட அவரது கருத்தில் மாற்று கருத்து இருக்கலாம். அது தவறில்லை. ஆனால்
சமூகத்தில் பெரும் விவாதங்களாக நாம் பேச வேண்டிய பல விஷயங்களை புத்தகம் துவக்கி
வைக்கிறது என்பது மட்டும் உண்மை. பெண் விடுதலை குறித்து ஒரு புதிய கோணத்தில் பேசும்
புத்தகம்தான் பெண் விடுதலை ஒரு புதிய தரிசனம்.

Comments
Post a Comment