வீரயுக நாயகன் வேள்பாரி - பாகம் 2
ஆசிரியர்: சு.வெங்கடேசன்
பக்கங்கள்: 800
தமிழ் இலக்கியங்களில் பெரும்பாலும் புகழப்படுபவர்களாக கடவுள்கள், அரசர்கள் மற்றும் பெருங்குடியை சேர்ந்தவர்கள்தான் இருப்பார்கள். மிக அரிதாக இவர்கள் அல்லாத மனிதர்கள் சிலரும் இடம் பெற்றுள்ளனர். அப்படியான நபர்களில் பாரி முக்கியமானவர்.
பொதுவாகவே பழங்குடி இன மக்கள், வேடர், குறவர் போன்றவர்கள் நாகரீக சமூகங்களுக்கு முகம் சுளிக்க வைக்கும் ஒரு மனித கூட்டமாகவே தெரிவார்கள். ஆனால் அதே சமயம் தொன்ம பழக்க வழக்கங்கள் பலவற்றையும் அழியாமல் பாதுகாத்து வருபவர்களாகவும் இந்த பழங்குடிகள் இருந்து வருகின்றனர்.
பெரும்பாலும் மலையில் வாழ்பவர்களும், அடர் காடுகளில் வாழ்பவர்களுமே பழங்குடிகளாக இருந்துள்ளனர். அதற்கு காரணம் அவர்களுக்கு தேவையான அனைத்துமே மலையில் கிடைத்துவிடுவதால் அவர்கள் சமதள நிலம் பக்கம் வருவதே இல்லை. இதனால் சமதள நிலம் வெகு சீக்கிரத்தில் அடைந்த நாகரீக முன்னேற்றத்தை பழங்குடிகளால் அடைய முடியவில்லை. இந்த சமதள மக்கள் அவர்களை கண்டுக்கொள்ளவில்லை என்றே கூறலாம்.
மலை வாழ் மக்களை சம தள மக்கள் நாகரீகமற்றவர்களாகவும், காட்டு மனிதர்களாகவுமே பார்த்தனர். இந்த நிலையில் இப்படி பார்க்கப்படும் மக்களில் இருந்து வேளிர் எனப்படும் பழங்குடிகளின் தலைவனான வேள்பாரி எப்படியோ தப்பி தவறி வரலாற்றில் பதிவாகியுள்ளார்.
அதற்கு இரண்டு காரணங்கள் அதில் ஒன்று கபிலருக்கும் பாரிக்கும் இருந்த நட்பு, இரண்டாவது பாரியின் வள்ளல் தன்மை. இதன் காரணமாக கடையெழு வள்ளல்களில் ஒருவராக பாரி பதிவு செய்யப்படுகிறார்.
வேள்பாரியை பற்றி மிக பிரபலமான விஷயங்கள் என்றால் அதில் முக்கியமானது முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி, இரண்டாவது மூவேந்தர்களும் சேர்ந்து வந்துதான் பாரியை தோற்கடித்தனர். இந்த இரண்டு செய்திகளுமே பாரியின் வள்ளல்தன்மை மற்றும் வீரத்தை குறிக்கும் விதத்தில் அமைந்துள்ளது
மிகவும் நுணுக்கமாக பாரியை அணுகிய எழுத்தாளர் சு. வெங்கடேசன் அவரை கதைநாயகனாக கொண்டு பேரரசுகளின் முன்பு இருந்த பழைய தமிழ் நிலத்துக்கு பாரியை நம்மை அழைத்து செல்கிறார். இந்த பேரரசு என்கிற அமைப்பு உருவாவதற்கு முன்பு ஒரு அமைப்பு முறை இருந்திருக்கும் அல்லவா?
அதுதான் குல தலைமுறை. ஒவ்வொரு குலமும் தனக்கென தனி குழுவை கொண்டு வாழ்ந்து வருகின்றன. திரையர்கள் என்பவர்கள் எருமைகளை வளர்க்கும் குடியினர். நாகர்கள் என்பவர்கள் நாகங்கள் இருக்கும் மலையில் வாழ்பவர்கள். நாகங்கள் பற்றியும் அதனை குறித்து நஞ்சுமுறி மருந்துகள் குறித்தும் அறிந்தவர்கள். அவர்களுக்கு பாம்புகள்தான் செல்லப்பிராணிகள் எனலாம்.
இப்படியாக கூவல் குடியினர், தத்த முத்துகாரர்கள் என பல வகையான குடியினர் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் உருவாகும் பேரரசுகள் ஒவ்வொரு குடியின் குல தலைவனையும் கொன்றழித்து அந்த குடிகளை தனது பேரரசில் சேர்த்து அந்த நிலத்தையும் கை கொள்கிறது.
அதிலிருந்து தப்பும் குடிகளும், குல தலைவர்களும் குடியேறும் ஒரே இடமாக பறம்பு மலை இருக்கிறது. பறம்பு மலை பச்சை மலை தொடரின் ஒரு அங்கமாகும். வேளிர்களின் ஆதிக்கத்துக்கு கீழ் இருக்கும் பறம்பு மலைக்குள் எந்த ஒரு எதிரியாலும் வர முடியாது. வந்தால் உயிரோடு திரும்ப போக முடியாது.
இப்படி பாதுக்காக்கப்பட்ட நிலமாக பறம்பு இருப்பதால்தான் குடிகளுக்கு அங்கு பாதுகாப்பு கிடைக்கிறது. போன பாகத்தில் போர் நடப்பதற்கான சூழலுக்கான அனைத்து விஷயங்களும் நடந்து வந்த நிலையில் இந்த பாகத்தில் 100 ஆவது பக்கத்தில் போருக்கான பேச்சுவார்த்தைகள் துவங்குகிறது. 400 ஆவது பக்கத்தில் போர் துவங்குறது. அடுத்து ஆறு நாள் நடக்கும் போர் அடுத்த 400 பக்கங்களுக்கு விளக்கப்பட்டுள்ளது.
இந்த நாவல் தமிழின் மிக முக்கியமான நாவல். உலகில் வேறு நிலங்களில் இருக்கும் மாயாஜால புராண கதைகளை கண்டு வியக்கும் நமக்கு நம் நிலத்தின் கதை ஒன்று இருக்கிறது. அதுவும் நம் கண்டு கொண்டு பார்க்காததாக இருக்கிறது என தெரிகிறது.
அந்த உலகிற்கு எழுத்தாளர் அழைத்து செல்லும் இந்த பயணத்தில் புத்தகம் படிப்பது போல இல்லை. ஏதோ திரைப்படம் பார்ப்பது போன்றே தோன்றுகிறது.
இயற்கை குறித்த விவரிப்பு:
கதை முழுக்கவும் இயற்கை குறித்த விவரிப்புகள் ஆச்சரியத்தை அளித்த வண்ணமே இருக்கின்றன. இப்போதைய கால கட்டத்திலேயே இயற்கையை நாம் அறிந்திருக்கும் விதமும் பழங்குடிகள் அறிந்திருக்கும் விதமும் வித்தியாசமாகதான் இருக்கும்.
இப்படியிருக்கும் போது பேரரசுக்கு முந்தைய காலக்கட்டங்களில் நாம் அறியாத மூலிகைகளும், உயிரினங்களுமே கூட இருந்திருக்கும். அப்படியான விஷயங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் மாயாஜால ஒரு உலகிற்குள் நம்மை அழைத்து செல்கிறது புத்தகம்.
இருட்டில் வெளிச்சம் தரும் பாம்பு, நெருப்பில் நீந்தும் நாகம், மனிதர்களை கொல்லும் மரம், பல கிலோ மீட்டர்கள் தாண்டி செல்லும் அம்புகள் என ஜப்பான் அனிமேவுக்கு நிகரான கதை களத்தை கொண்டதாக இருக்கின்றன வேள்பாரியின் மாயாஜாலங்கள்.
போர் துவங்கிய பிறகு புத்தகத்தை கீழே வைப்பது கடினமான விஷயமாகிவிட்டது. இது வாரா வாரம் விகடனில் வந்த காலத்தில் போரின் அடுத்த நிலையை அறிய மண்டையை பிய்த்துக்கொண்ட மக்கள் கூட்டத்தை பற்றி நினைக்கும்போது கண்ணு வேர்க்கிறது.
அதே போல போர் துவங்கியது முதலே வேள்பாரி எப்போது மலை விட்டு இறங்கி போர்களம் வருவான் என்கிற எதிர்பார்ப்பு நம்மிடையே இருந்து வரும். பறம்பின் பெரிய தலைகள் எல்லாம் அடி வாங்கும்போது பாரி ஏன் வரலை என எதிர்பார்ப்போடு காத்திருப்போம். இறுதியில் பாரி இறங்கி சண்டை செய்யும் சம்பவம் கே.ஜி.எஃப் போன்ற ஆக்ஷன் ப்ளாக் படங்களை தாண்டி செல்லும்.
வேள்பாரியின் இரு பாகங்களை முடிக்கும்போது நீங்கள் அவரின் மிகப்பெரிய ரசிகராகி இருப்பீர்கள். ஆனாலும் இந்த புத்தகம் கல்கியின் பொன்னியின் செல்வன் அளவிற்கான அங்கீகாரத்தை பெறவில்லை. அதற்கு முக்கிய காரணம் கதையின் கதாநாயகன் ஒரு மலைவாழ் காடன்.
அவனுக்கென்று கோட்டைகளோ தங்க கீரிடங்களோ கிடையாது. மக்களோடு மக்களாக சுற்றி கொண்டிருக்கும் ஒரு வேடன்தான் வேள்பாரி. முக்கியமாக வேள்பாரிக்கு எதிராக நிற்கும் எதிரிகள் மூவேந்தர்கள். காலம் காலமாக நாம் மூவேந்தர்களின் புகழ்பாடிதான் மெய் சிலிர்த்து வருகிறோம். ஒவ்வொரு சாதியினரும் கூட தங்களது புகழை பரப்புவதற்கு ஒரு மன்னன் பெயரைதான் பயன்படுத்துகின்றனர்
அப்படி இருக்கும்போது ஒரு வேடன் இந்த மூவேந்தர்களையும் ஓட ஓட விரட்டுவது என்பது இவர்களின் வரலாற்று புகழுக்கு பங்கம் விளைவிப்பதாக இருக்கிறது. ஒரு வேளை ராஜ ராஜ சோழனை புகழாரம் செய்து சு வெங்கடேசன் எழுதியிருந்தால் அந்த புத்தகத்திற்கு தனி மவுசு கிடைத்திருக்கும்.
ஆனால் கல்கி அளவிற்கு இல்லை என்றாலும் இதையெல்லாம் தாண்டி வேள்பாரிக்கு என்று ஒரு கூட்டம் இருக்கவே செய்கிறது. அவர்கள் எப்போதும் வேள்பாரியை கொண்டாடி வருகின்றனர்.
வேள்பாரி கதையில் வருபவை உண்மையா பொய்யா என்கிற பேச்சுக்கு யாரும் வர தேவையில்லை. அது கற்பனைதான். நடந்த சில சம்பவங்கள் வேண்டுமானால் உண்மையாக இருக்கலாம். ஆனால் தமிழர் நிலத்தை களமாக கொண்டு இவ்வளவு சிறப்பான ஒரு கதையை நான் படித்ததில்லை.
கதைகளின் வழியாகவே அனைத்து நாடுகளும் தங்களின் நிலம் குறித்த தகவல்களை கடத்துகின்றன. சின்சானில் துவங்கி ஜப்பானின் அனைத்து படங்களிலும் ஜப்பானின் பழக்க வழக்கங்கள் பாரம்பரியத்தை பார்க்க முடியும்.
நருட்டோ என்கிற கதையை அனிமே வடிவில் உலகம் முழுவதும் கடத்தியதன் மூலம் தங்கள் பாரம்பரியத்தை, தொன்ம கதைகளை உலகறிய செய்துள்ளனர். சமீபத்தில் wu kong என்கிற சீனாவின் வீடியோ கேம் உலகளவில் அதிக வரவேற்பை பெற்றது. குரங்கு ராஜா எனப்படும் சீனாவின் புராண கதையை அடிப்படையாக கொண்டு இந்த கேம் அமைக்கப்பட்டிருந்தது.
இப்படியாக தங்கள் நிலத்தின் கதையை வெவ்வேறு வடிவில் ஒவ்வொரு நாட்டினரும் உலகறிய செய்துக்கொண்டே இருக்கின்றனர்.
அந்த வகையில் இந்த நிலத்தின் கதையாகவே நான் வேள்பாரியை பார்க்கிறேன். இதை புத்தகமாகவே விட்டு விடாமல் நருட்டோ மாதிரியான அனிமேஷன் தொடராக மாற்றும் முயற்சி நடந்தால் நருட்டோவை விட சிறப்பான இடம் உலகளவில் வேள்பாரிக்கு கிடைக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் அதை சரியாக செய்வது அதை விட முக்கியமான விஷயமாக இருக்கிறது.
இன்னமும் சொல்ல எவ்வளவோ இருந்தாலும் அதை நீங்கள் புத்தகத்தின் வழியாக அறிந்துக்கொள்ளுங்கள் என கூறிக்கொள்கிறேன் நன்றி..

Comments
Post a Comment