சிறு வயது முதலே சிறுகதைகள் மீது எனக்கு ஆர்வம் உண்டு. ஆரம்பத்தில் பள்ளிகளில் துணைப்பாடங்களில் படித்தவரை சிறுகதைக்கான இலக்கணம் என்னவென்று எனக்கு புரியவில்லை. பிறகு இலக்கிய வட்டாரத்திற்குள் வந்த பிறகு ஏதோ கடப்பாறையை கொண்டு பாறையை நகர்த்தும் வகையில் சிறுகதைக்குள் கதைக்கரு இருக்க வேண்டும் என நினைத்தேன்.
பிறகு போன வருடம் நிறைய சிறுகதைகளை படித்ததன் விளைவாக சிறுகதைகளுக்கு இலக்கணம் என்றெல்லாம் ஒன்றும் கிடையாது என்பதை ஓரளவு புரிந்துக்கொண்டேன். எது வேண்டுமானாலும் ஒரு சிறுகதையாக இருக்கலாம்.
இரு நபர்கள் பேருந்தில் பேசி கொண்டு வரும் உரையாடல், ஒரு எறும்பின் மனநிலை, தெருவோர பிச்சைக்காரனின் நடவடிக்கை எது வேண்டுமானாலும் சிறுகதையாக மாற்றப்படலாம். பெரும்பாலும் நம் வாழ்க்கையில் நாம் சந்தித்த உணர்ந்த விஷயங்களில் இருந்தே சிறுகதைகள் உருவாகுவதாக நான் நினைக்கிறேன்.
நண்பர் சேவியர் ராஜதுரை எழுதிய இடந்தலைப்பாடு சிறுகதை தொகுப்பும் அப்படியான ஒரு சிறப்பான தொகுப்பாக இருந்தது. இவற்றில் உள்ள சிறுகதைகள் எல்லாம் அவர் தன் வாழ்வில் உணர்ந்த விஷயங்களின் அடிப்படையில் அமைந்திருக்கலாம் என நினைக்கிறேன்.
இவற்றில் ஒரு சில காதல் கதைகள் இருந்தாலும் கூட அவற்றின் கதை அம்சத்தில் மாற்றங்கள் இருக்கின்றன. ஒரு பொது கழிப்பிடத்தின் சூழலையும், செல்லப்பிராணிக்காக கண்ணீர் சிந்தும் மனதையும், சத்துணவு முட்டைக்காக உருவான நட்பையும் இன்னும் பலவற்றையும் தனது கதைகளின் வழியாக நம் மனதிற்குள் கடத்தியுள்ளார் சேவியர்.
ஒரு சிறுகதை என்பது படைப்பாளியின் உருவாக்கமே. அது இப்படி முடிந்திருக்கலாம். க்ளைமேக்ஸ் சரியில்லை போன்ற இடத்திற்குள் எல்லாம் சிறுகதைகளை கொண்டு செல்ல முடியாது. எனவே நானும் அந்த வட்டத்திற்குள் கதைகளை கொண்டு செல்ல விரும்பவில்லை. இந்த சிறுகதை தொகுப்புகளில் எனக்கு மிக பிடித்த கதைகள் என்றால் பாரா முகம், இடந்தலைப்பாடு, தொடர்புகொள்ளும் வாடிக்கையாளர் ஆகிய கதைகள்.
எழுத்தாளர் சேவியர் சகோவிடம் வைக்கும் கோரிக்கை எல்லாம் புதுமைப்பித்தன் போல பலதரப்பட்ட மக்களின் கதைகளையும், உங்கள் நிலம் சார்ந்த விஷயங்களையும் இன்னமும் சிறுகதைகள் மூலம் வெளிப்படுத்தவும். நல்ல வாசிப்பு அனுபவத்தை கொடுத்த புத்தகம் இடந்தலைப்பாடு…

Comments
Post a Comment