இந்தியா அடிமைப்படுத்தப்பட்ட வரலாறு… ஐரோப்பிய ஆக்கிரமிப்புகள் (1498-1765)
ஆசிரியர்:ராய் மாக்ஸம்
கிழக்கு பதிப்பகம்
பக்கங்கள்: 278
இந்தியா குறித்து சில முக்கியமான புத்தகங்களை எழுதியவர்தான் எழுத்தாளர் ராய் மாக்ஸம். இவரின் ஆய்வுகள் பலவும் இந்திய வரலாறு குறித்து முக்கியமான விஷயங்களை பேசுகின்றன. ஏற்கனவே இவர் எழுதி தமிழில் வெளியான உப்புவேலி மற்றும் தே ஒரு இலையின் வரலாறு ஆகிய புத்தகங்களை படித்துள்ளேன்.
அந்த வகையில் இது மூன்றாவது புத்தகம். ஆங்கிலத்தில் The Theft of India: The European Conquests of India 1498–1765 என்று வெளியான புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்புதான் இந்த புத்தகம். பெரும்பாலும் பள்ளி காலத்தில் இந்திய விடுதலை குறித்து படிக்கும்போது ஏதோ பிரிட்டிஷார்தான் நம்மை அடிமைப்படுத்தியதாகவும் அதற்கு முன்பு இந்தியர்கள் எல்லையை கூட யாரும் தொட்டதில்லை என்பது போலவும் நினைத்து கொண்டிருந்திருப்போம்.
ஆனால் அதற்கு முன்பே இந்தியாவை கொள்ளையடித்து போன பல கூட்டங்களை இந்த புத்தகம் விவரிக்கிறது. 1498 இல் முதன் முதலாக வாஸ்கோடாகாமா என்கிற வெள்ளையன் கேரளாவில் உள்ள கோழிகோட்டில் காலடி எடுத்து வைப்பதில் இருந்து கதை துவங்குகிறது.
நீடாமங்கலத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு செல்லும் ஒரு இரயிலின் பெயர் இப்போதும் வாஸ்கோடாகாமா எக்ஸ்ப்ரஸ் என்றுதான் இருக்கிறது. ஆனால் இவன் அப்பேற்பட்ட புகழுக்கு எல்லாம் தகுதியான ஆளே இல்லை என்பது புத்தகத்தின் வழியாக அறிந்த செய்தி.
கோழிகோட்டுக்கு வாஸ்கோ டா காமா ஒரு ஐரோப்பியர். அப்போது அங்கு ஆட்சி செய்து வந்த சமுத்திரன் என்கிற மன்னன் வழுவாக வாஸ்கோடாகாமாவை எதிர்த்துள்ளார். அவரை எதிர்த்து போர் செய்து வாஸ்கோ டா காமா வாங்கிய உயிர்பழி எக்கச்சக்கம். கடல் வழி தாக்குதல் என்பது அப்போது கிடையாது என்பதால் சமுத்திரனிடம் கடற்படை என்பது வழுவாக இல்லை.
அதனை தொடர்ந்து போர்ச்சுக்கீசியர்களின் ஆதிக்கத்தை புத்தகம் பேசுகிறது. மசாலா பொருட்களுக்காக எப்படியாவது இந்திய வர்த்தகத்தை கைபற்ற வேண்டும் என உள்ளே குதித்த கூட்டம்தான் போர்ச்சுக்கீசியர்கள். டையு, கோவா போன்ற பகுதிகளை கைப்பற்றிய இவர்கள் அங்கு தங்களுக்கான கோட்டைகளை அமைத்து வர்த்தகம் செய்துள்ளனர்.
இவன்களும் லேசுப்பட்ட ஆள் இல்லை. மத பிரச்சாரம் மதத்திற்காக மக்களை கொ.லை செய்வதை முக்கிய விஷயமாக இவர்கள் செய்துள்ளனர். அப்போது போர்ச்சுக்கீசியர்களுக்கு வியாபார எதிரிகளாக அரேபியர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் இருந்துள்ளனர். 1510 இல் கோவாவில் இருந்த ஒரு அரேபிய கிராமத்தை அழித்து அங்கு இருந்த கல்லறை கற்களை கொண்டே ஒரு தேவாலயத்தை எழுப்பியிருக்கின்றனர் போர்ச்சுக்கீசியர்கள்.
அதே போல கொள்ளையடித்தல், கிராமங்களை சூறையாடுதல் என பல வேலைகளை பார்த்து இருக்கிறான்கள். வணிகம் செய்ய வந்தோம் என வந்துவிட்டு அதை விட்டு பாக்கி வேலை எல்லாம் நடத்தி இருக்கிறான்கள். பலரும் மேலை நாட்டு கலாச்சாரம் என்று இவர்களை கண்டு வியந்து வருகின்றனர்.
ஆனால் அவர்களின் வரலாற்றை பார்த்தால் கொள்ளையடிப்பதுதான் இவர்களின் முக்கிய சாராம்சமாக இருந்திருக்கிறது. இதில் பெரிய கூத்து என்னவென்றால் பிரிட்டிஷார் வரும் வரையிலேயே முகலாயர்கள் பலம் வாய்ந்த பேரரசாக வட இந்தியாவில் இருந்துள்ளனர்.
ஆனாலும் கூட இந்தியா ஒன்றுப்பட்ட ஒரே ஒரு தேசமாக இல்லாத காரணத்தால் இந்த ஆங்கிலேய ஊடுருவல்களை அவர்களால் கூட தடுக்க முடியவில்லை.
ஆனால் இந்த போர்ச்சுகீசியர்களுக்கு விபூதி அடிக்கவும் அடுத்து சில குழுக்கள் வந்தன. டச்சு, பிரெஞ்சு மற்றும் ஆங்கிலேயர்கள் வரிசையாக போர்ச்சுக்கீசியர்களுக்கு எதிராக களத்தில் குதித்தனர்.
அதிலும் பிரிட்டிஷார் வரும்போது சில நல்ல உடன்படிக்கையோடு வந்தனர். மன்னர்களிடம் சென்று போர்ச்சுக்கீசியர்கள் உங்களிடம் பிடுங்கிய பகுதியை மீட்டு தருகிறோம். அதற்கு பதிலாக அங்கு வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும். இப்படி ஒரு உடன்படிக்கையோடுதான் பிரிட்டிஷார் உள்ளே நுழைந்தனர்.
உண்மையில் ஆரம்பத்தில் மிக நாகரிகமான ஒரு வியாபாரியாக மட்டும்தான் பிரிட்டிஷார் உள்ளே வந்திருக்கின்றனர். ஆனால் பிறகு அவர்களுமே தங்கள் வேலையை காட்டியுள்ளனர்.
இந்தியாவில் அடிமை வியாபாரம் அந்த காலக்கட்டங்களில் செழிப்பாக இருந்துள்ளது. காசுக்காக குழந்தைகளை விற்பனை செய்வது சகஜமான விஷயமாக இருந்துள்ளது. ஒரு பயணி இப்படி எழுதியுள்ளார். இந்தியாவில் பெண்கள், குழந்தைகளை கூட எளிதாக வாங்கிவிட முடிகிறது. ஆனால் பசுமாட்டை வாங்க நினைத்தால் நம் கதையை முடித்துவிடுவார்கள் என்பதாக எழுதியிருக்கிறார்.
உள்நாட்டில் நடந்த கலவரங்களில் 1500களில் குஞ்சாலி மரைக்காயர் முன்னெடுத்த போராட்டம் முக்கியமானது. பீரங்கிகளை கொண்ட போர்ச்சுக்கீசிய கப்பல்களை தாக்குவது முடியாது. உருவத்திலும் அது மிக பெரியது என்பதுதான் அப்போதைய மன்னர்களின் எண்ணமாக இருந்தது.
அதுவரை கடற்வழி தாக்குதலில் யாராலும் போர்ச்சுக்கீசியர்களை தோற்கடிக்க முடியவில்லை. தொடர்ந்து இஸ்லாமியர்களும் அரேபியர்களும் குடும்பம் குடும்பமாக அழிக்கப்பட்டு வந்து கொண்டிருந்தனர். கேராளாவில் வாழும் இஸ்லாமிய மாலுமிகளுக்கு தலைமை தாங்கும் பொறுப்பை மரைக்காயர் குடும்பத்தினர் கொண்டிருந்தனர். மலபார் கடற்கரையை ஒட்டிய பகுதிகள் இவர்கள் அதிகாரத்திற்குட்பட்டது
தொடர்ந்து தனது சமூகத்திற்கு நடக்கும் வன்முறையை எதிர்த்து குஞ்சாலி மரைக்காயர் போர்ச்சுக்கீசியர்களுக்கு எதிரான தனது தாக்குதலை தொடங்கினார். அவரிடம் paraus, dhows என்ற இரு சிறிய படகுகள் இருந்தன. போர்ச்சுக்கீசியர்கள் கப்பலோடு ஒப்பிடும்போது அவை சிறிய படகுகள் மட்டுமே
ஆனால் மிக வேகமாக இயங்கும் அந்த படகுகளை வைத்து போர்ச்சுக்கீசியர்கள் கப்பல்களை அழித்து காட்டியுள்ளார் மரைக்காயர். பேட்மேன் வெர்சஸ் சூப்பர்மேன் திரைப்படத்தில் உனக்கு ரத்தம் வருமா என சூப்பர் மேன் கேட்பதாக ஒரு காட்சி இருக்கும். அந்த மாதிரி போர்ச்சுக்கீசியர்களை படகுகளை கூட அழிக்க முடியும் என காட்டிய முதல் கூட்டம் இவர்கள்தான்.
போர்ச்சுக்கீசியர்களுக்கு எதிரான பெரும் கடற்போரை நிகழ்த்தினாலும் அரசியல் பிரச்சனைகளால் மரைக்காயர்களும் வீழ்ச்சியை சந்தித்துள்ளனர். சமுத்திர மன்னர் போர்ச்சுக்கீசியர்களுடன் கூட்டு சேர்ந்ததால் வீழ்ச்சியை கண்டார் குஞ்சாலி மரைக்காயர். பிறகு போர்ச்சுகீசியர்கள் அவரை சிறை பிடித்து தலையை அறுத்து கொன்றனர்.
தொடர்ந்து அடுத்த அத்தியாயம் ராபர்ட் க்ளைவ் மற்றும் ஈஸ்ட் இந்தியா கம்பெனி குறித்து பேசுகிறது. அந்த சமயத்தில் வங்க தேசத்தில் நடந்த வரலாறு காணாத பஞ்சம் பற்றியும் பேசுகிறது. 1757 இல் கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுகைக்கு வந்தது வங்க தேசம்.
அப்போது ஆங்கிலேயர்கள் வரிவிதிப்புகள் மற்றும் பயிர் கொள்முதல்களில் கடுமையான மாற்றங்களை கொண்டு வந்தனர். கோதுமை, அரிசி என விளைவித்து வந்த விவசாயிகளை தங்களுக்கு லாபம் தரும் இண்டிகோ, சர்க்கரை, ஓபியம் ஆகியவற்றை வளர்க்க கட்டாயப்படுத்தினர் ஆங்கிலேயர்கள்.
இதனால் அத்தியாவசிய உணவு உற்பத்தி குறைந்தது. அதே சமயம் மழையும் குறைந்து வறண்டு போனது வங்க தேசம். மக்கள் பெரும் பஞ்சத்தை அடைந்தனர். அப்போதும் ஆங்கிலேயர்கள் வரி வசூலிப்பத்தை நிறுத்தவில்லை. பஞ்சத்தில் தினம் 10 வங்க தேசத்தினர் இறந்த நிலையிலும் கையிருப்பில் இருந்த உணவு பயிர்களை ஏற்றுமதி செய்தது கிழக்கிந்திய கம்பெனி.
அதன் விளைவு வரலாறு காணாத பஞ்சத்தை அடைந்தது வங்க தேசம். ஊர் முழுக்க பிணங்களும், நடை பிணமாக வாழும் மெலிந்த மக்களும் மட்டுமே நிறைந்திருந்தனர். அப்போது அங்கு பணிப்புரிந்த வெள்ளையர்களாலேயே அதை தாங்கி கொள்ள முடியவில்லை.
மனிதர்கள் இறந்தவர்களின் உடலை சாப்பிடும் அளவு நிலை மோசமாகியுள்ளது. அந்த பஞ்சத்தால் 3 கோடி வங்க தேசத்தினரில் 1 கோடி பேர் இறந்துள்ளனர். உலக அளவில் மொத்த வரலாற்றில் காலணி ஆதிக்கம் என ஆங்கிலேயர்கள் செய்த கொடுமைகளை விடவும் ஆயிரம் மடங்கு கொடுமையை ஒரு சிறிய பகுதிக்குள் இங்கிலாந்துக்காரர்கள் நடத்தியிருந்தனர்.
என்னை பொறுத்தவரை இந்திய வரலாறு சார்ந்த புத்தகங்களில் இது மிக முக்கியமான புத்தகம். வாய்ப்புள்ளவர்கள் கண்டிப்பாக படிக்கவும்.

Comments
Post a Comment