உணவு சரித்திரம்
ஆசிரியர்: முகில்
வரலாற்று நிகழ்வுகளை சுறுசுறுப்பாக படிப்பதற்கு எளிமையாக எழுதக்கூடிய ஒரு சில தமிழ் எழுத்தாளர்களில் முக்கியமானவர் எழுத்தாளர் முகில். வெளிச்சத்தின் நிறம் கறுப்பு மூலமாக முகில் புத்தகம் மீது ஆர்வம் உண்டானது. அடுத்து இப்போது படித்த புத்தகம் உணவு சரித்திரம்
தக்காளி, வெங்காயம் மிளகாயில் துவங்கி இன்னும் எத்தனையோ உணவு பொருட்கள் காலம் காலமாக நம் பூமியில் விளைகின்றன என்றுதான் நானும் கூட பல காலங்களாக நினைத்து வந்தேன். ஆனால் உண்மையில் அப்படியல்ல என்பது சில மாதங்களுக்கு முன்பு ராய் மார்க்ஸம் எழுதிய அடிமைப்படுத்தப்பட்ட இந்தியா புத்தகத்தை படித்தப்போது தெரிந்தது. அதில் கொஞ்சமாக இது பற்றிய விஷயங்கள் இருந்தன.
தற்சமயம் முகில் புத்தகம் முழுக்க முழுக்கவே உணவுகளின் வரலாற்றை கொண்டதாக உள்ளது, உண்மையில் பக்கத்துக்கு பக்கம் வியப்புகளை அளிக்க கூடிய ஒரு புத்தகம் என்றுதான் கூற வேண்டும். எப்போதும் விடை தெரியாத சின்ன சின்ன சந்தேகங்களுக்கு நாமே ஒரு விடையை உருவாக்கி கொள்வோம்.
அப்படியாக இவ்வளவு நாளாக ஏதோ மரத்தில் வழியும் பிசின் தான் பெருங்காயம் என்றுதான் நான் நினைத்து வந்தேன். அதுவே பொய் என்பது புத்தகம் படிக்கும்போதுதான் தெரிந்தது. இந்த புத்தகத்தில் உப்பு, ரொட்டி, மாம்பழம், ஹல்வா, மிளகு, பலா, சாக்லேட், கேழ்வரகு, கொழுக்கட்டை, கரும்பு, பெருங்காயம், எள், மரவள்ளி, பனை, வெற்றிலை பாக்கு ஆகியவற்றின் உணவு சரித்திரம் கூறப்பட்டுள்ளது.
இதில் என்னை வியக்க வைத்த நிறைய வரலாறு உண்டு அதில் மரவள்ளிக்கு எப்படி கப்ப கிழங்கு என பெயர் வந்தது, சாக்லேட்டின் வரலாறு, மாம்பழத்தில் ஒட்டு முறையில் உருவாகும் செடிகள், வெற்றிலையில் ஆண் வெற்றிலை பெண் வெற்றிலை வேறுபாடு (எங்கள் வீட்டில் உள்ளது ஆண் வெற்றிலை என்பதை அறிய புத்தகம் உதவியது) என பல விஷயங்களை புத்தகத்தின் வழி அறிய முடிகிறது.
இதற்காக எக்கச்சக்கமான தகவல்களை திரட்டியிருக்கிறார் முகில். அதற்கே ஒரு பெரிய கைத்தட்டலை கொடுக்க வேண்டும். ஒவ்வொரு உணவிலும் அவற்றின் வரலாறு, இலக்கியத்தில் அவை எவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றின் ஆரோக்கிய நன்மைகள் என்ன? உலகளவில் இவற்றை கொண்டு எந்த வகையான உணவுகள் எந்த நாடுகளில் கிடைக்கின்றன? இப்படி ஒவ்வொரு உணவுக்கும் முகில் சேர்த்துள்ள தகவல்கள் அதிக மதிப்புடையவை.
கட்டாயம் வாசிக்க வேண்டிய புத்தகம்..
Comments
Post a Comment