சாம்பலின் சங்கீதம்
கிராபிக் நாவல்
மொத்த மனிதக்குலத்துக்கும்
அச்சுறுத்தலாக இருந்த கண்டுப்பிடிப்புகளில் மிக முக்கியமான ஒன்று அணுகுண்டு. இரண்டாம்
உலகப்போரில் மிகப்பெரிய அழிவு ஏற்பட்டதற்கும் திரும்ப உலகப்போரே உருவாகாமல் இருப்பதற்கும்
காரணமாக அமைந்த ஒரு கண்டுப்பிடிப்பு.
அணுக்கரு குறித்த
சோதனை என்பது பல நூற்றாண்டுகளாகவே நடந்துக்கொண்டுதான் இருக்கிறது. எப்போதும் அறிவியலில்
தியரியாக கூறப்படும் தத்துவங்களை வெளியில் இருந்து கேட்பவர்களுக்கு நகைச்சுவையாகவே
இருக்கும். இதுல எப்படினே லைட் எறியும் என்பதாகதான் அவர்களுக்கு இருக்கும்.
ஆனால் ராஜ ராஜ
சோழனிடம் சென்று இண்டர்நெட் என்று ஒன்று எதிர்காலத்தில் வரும் அதில் உலகில் உள்ள எல்லா
தரவுகளும் கிடைக்கும். ஆனாலும் பெரும்பாலானோர் கேலிக்கைக்கு மட்டுமே அதை பயன்படுத்துவர்
என கூறினால் அவர் நமக்கு மண்ட கோளாறு என்றே நினைப்பார்.
அணுவை பிளப்பதன்
மூலம் பெரும் ஆற்றல் வெளிப்படும் என்பதும் ஆரம்பத்தில் அப்படியான விஷயமாகதான் பார்க்கப்பட்டது.
இந்த புத்தகம் அணுகுண்டு குறித்த யோசனை உருவானதில் துவங்கி ஹிரோஷிமாவில் அமெரிக்கா
குண்டு போட்டவரை அரசியல் ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் உலக நாடுகளுக்குள் அணுகுண்டு
குறித்து நடந்த ஆராய்ச்சியை விவரிக்கிறது.
ஒரு நாட்டவர்
நல்லவர் மற்றவர்கள் கெட்டவர்கள் என்ற பாணியில் இல்லாமல் போரில் இறங்கின எல்லா நாடுமே
சல்லி பயல்கள்தான் என்கிற பாணியில் புத்தகம் அமைந்திருப்பது சிறப்பு.
ஹெச்.ஜி வெல்ஸ்
என்கிற அறிவியல் புனைவு எழுத்தாளர் ஒரு மாயாஜாலமாக அவருடைய புத்தகத்தில் முதன் முதலாக
அணுக்கரு ஆற்றலை குறிப்பிட்டார். ஆனால் அது சாத்தியமான விஷயம்தான் என்பதை அணுக்கரு
சங்கிலி தொடர் வினையை கண்டுப்பிடித்ததன் மூலம் நிரூபணமாக்கியவர் விஞ்ஞானி சில்லார்ட்.
ஆக இந்த விஷயத்தை
ஆரம்பித்து வைத்தவர்கள் இவர்கள் இருவர்தான். ஆனால் அதே சில்லார்ட்தான் இறுதியில் அணு
ஆயுதங்கள் வேண்டாம். ஜப்பான் மீது தாக்குதல் நடத்தாதீர்கள் என்றும் மன்றாடினார். எப்படி
இருந்தாலும் பூமிக்கு இப்படியான ஆபத்தை உண்டாக்கி அதை அரங்கேற்றிய பெருமை வழக்கம் போல
வெள்ளையர்கள் அல்லது அமெரிக்கர்களையே சேரும்.
வரலாறு முழுக்க
வெள்ளையர்கள் செய்த பெருங்கொடுமைகளில் இதுவும் ஒன்று. தற்சமயம் உலகில் உள்ள அணுகுண்டுகளை
கொண்டு மூன்று முறை மொத்த பூமியையும் அழிக்க முடியுமாம். இதுதான் இப்போது உலக போர்கள்
நடக்காமலும் தடுத்து வருகிறது. இந்த புத்தகம் மிக விவரமாக அணுகுண்டு ஆராய்ச்சி குறித்து
பேசுகிறது. உலக மக்கள் அனைவருமே படிக்க வேண்டிய புத்தகம்.

Comments
Post a Comment