பேய்ச்சி –
ம.நவீன்
உலகம் முழுக்கவே
மதம் மற்றும் மதம் சார்ந்த அரசியல்கள் வருவதற்கு முன்பிருந்தே இறந்தவர்களை தெய்வங்களாக
வணங்கும் வழக்கம் இருந்தது. இந்தியாவில் குறிப்பாக சைவ சமயத்தில் குறிப்பிடப்படும்
சிவன், அம்மன், முருகன் போன்றவர்கள் எல்லாம் வைணவம் வருவதற்கு முன்பு ஒவ்வொரு நிலங்களில்
குல தெய்வங்களாகவும் வட்டார தெய்வங்களாகவும் வணங்கப்படும் வழக்கம் இருந்துள்ளது.
குல தெய்வ வழிபாட்டில்
இருந்தவர்களை பெரு தெய்வ வழிபாட்டுக்குள் கொண்டு வரவே அம்மன் ஸ்ரீ ரங்கனின் தங்கையாகவும்,
சிவனின் மனைவியாகவும் ஆக்கப்பட்டார். ஆனால் உண்மையில் கர்ப்பினி பெண்கள், நோயால் இறந்த
பெண், சிறுமியாக இருக்கும்போதே இறந்தவர்களே பெரும்பாலும் அம்மனாக வணங்கப்பட்டு வந்துள்ளனர்.
இன்றும் அம்மன்
கோவில்களில் சிவனுக்கு அதிகமாக சன்னதியை பார்க்க முடியாது. அம்மன் கோவில்களுக்கு வெளியே
காவல் தெய்வங்களாக கூட பெண் தெய்வங்களே இருப்பார்கள்.
அப்படி இருந்த
அம்மன்களில் மாரியம்மன், காளி, ஆனைமலை ஆங்கார நீலி மாதிரியான துஷ்ட தெய்வங்களின் வரிசையில்
முக்கியமான தெய்வம் பேச்சியம்மன்.
பேய்ச்சியை பெண்களின் பாதுகாவல் தெய்வமாக
மையப்படுத்தி மலேசிய எழுத்தாளரான நவீன் எழுதிய நாவல்தான் பேய்ச்சி. இவரது முதல்நாவல் இது.
ஆரம்பத்தில்
தமிழ்நாட்டில் ஒரு குக்கிராமத்தில் துவங்கும் கதை பிறகு முழுக்க முழுக்க மலேசியாவில்
வசிக்கும் புலம்பெயர் தமிழர்களோடு பயணிக்கிறது. மலேசியாவில் வசிக்கும் புலம் பெயர்
தமிழர்களின் வாழ்க்கை நிலை, பண்ணை வேலை முறை, சீனர்களின் அடக்குமுறை போன்றவை 2000 காலக்கட்டங்களில்
எப்படி இருந்தது என்பதை நாவல் வழி வெளிப்படுத்தியுள்ளார் எழுத்தாளர்.
இதனாலேயே இந்த
புத்தகம் மலேசியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. கதையில் பேய்ச்சி அம்மனை ஏதோ திடீரென
வரும் தெய்வம் என்பதாக காட்டவில்லை, மாறாக ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் பேய்ச்சி இருக்கிறாள்.
அந்த பெண்களின் அதிகமான உக்கிரத்தில் இருந்து பேய்ச்சி வெளிப்பட்டு கொண்டே இருக்கிறாள்.
ஒரு நாகமாக, வண்ணத்து பூச்சியாக, குருவியாக என பேய்ச்சி ஏதோ ஒரு வகையில் மக்களை சுற்றி
கொண்டே இருக்கிறாள்.
எப்போதெல்லாம்
மக்களுக்கு தொல்லை வருகிறதோ முக்கியமாக பெண்ணுக்கு அநீதி நடக்கிறதோ அப்போதெல்லாம் பேய்ச்சியின்
ருத்ர தாண்டவம் துவங்குகிறது. பேய்ச்சியை காட்டிய விதமும் சரி, மலேசிய தமிழர்களின்
வாழ்க்கை முறையும் சரி பாரபட்சமின்றி சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. வாய்ப்பிருந்தால்
படிக்க வேண்டிய புத்தகம்..
Comments
Post a Comment