பென் என்கிற நிறுவனம் குழந்தைகளுக்கு சமூகநீதி விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு நல்ல முன்னெடுப்பாக சமூகநீதி காமிக்ஸ்களை வெளியிட்டுள்ளனர். போன காமிக் கானின் போதே அரசியல் தொடர்பான மக்களின் முதல்வர் என்கிற வீடியோ கேமை வெளியிட்டிருந்தனர்.
அதில் கேம் விளையாடும் நாம்தான் முதல்வராக இருப்போம். நாம் எடுக்கும் முடிவுகளின் அடிப்படையில் அடுத்து நாம் முதல்வராக முடியுமா இல்லையா? என கேம் செல்லும்.
அதில் கேட்கப்படும் கேள்விகளே சமூக நீதி அடிப்படையில் இருப்பதை பார்க்க முடிந்தது. இந்த நிலையில் இந்த வருடம் அடுத்த முன்னெடுப்பாக தமிழில் குழந்தைகளுக்கு சமூகநீதியை பயிற்றுவிக்கும் ஒரு முன்னெடுப்பாக மூன்று காமிக்ஸ்களை வெளியிட்டுள்ளனர்.
வந்த பாதை காமிக்ஸை பொறுத்தவரை வயதான பெரியவர் எப்போதுமே புத்தகங்களை படித்து வருபவராக இருக்கிறார். இந்த நிலையில் சாதிய பாகுபாடு உள்ள அந்த கிராமத்தில் தொடர்ந்து பெரியவரின் தெருவை சேர்ந்த குழந்தைகள் உடல் அளவில் மனதளவிலும் தாக்கப்படுகின்றனர்.
அதற்கு எதிராக பெரியவர் எடுக்கும் போராட்டங்களை வைத்து கதை செல்கிறது. இந்த பெரியவர் அப்படியே பெரியாரின் சாயலாக இருக்கிறார். பெரியார் பெரிய அளவில் செய்த அத்தனை போராட்டங்களையும் தனது கிராமத்தில் செய்கிறார் பெரியவர்.
சமூகநீதி என்னும் கருத்தை ஏன் குழந்தைகளிடம் கடத்த வேண்டும் என்கிற கேள்வி சிலருக்கு வரலாம். சமூக வலைத்தளங்களில் நண்டு சிண்டுகள் எல்லாம் சாதிய கயிறை கட்டிக்கொண்டு நாங்கள் ஆண்ட பரம்பரை என பெருமை பேசுவதை பார்க்க முடிகிறது.
நவீன யுகத்திலும் கூட இன்னமும் பல வருடங்கள் பின்னோக்கி வாழும் அந்த கூட்டங்களே சாதிய பாகுப்பாட்டை பிஞ்சிலையே விதைக்க ஆர்வம் காட்டும்போது அதை தடுப்பதற்கான முன்னெடுப்பும் சிறுவர் இலக்கியத்தில் இருந்தே துவங்க வேண்டும்.
அதற்கு இந்த காமிக்ஸை ஒரு முன்னெடுப்பாக பார்க்கிறேன். மிக விவரமாக சமூக நீதியை குழந்தைகளிடம் பேசினால் அவர்களுக்கு புரியாது. எனவே அவர்களுக்கு புரியும் அளவில் இந்த காமிக்ஸ் பேசுகிறது. நல்ல முயற்சி.. இதை முன்னெடுத்த குழுவிற்கு வாழ்த்துக்கள்.

Comments
Post a Comment