காதுகள்
எம்.வி வெங்கட்ராம்
160 பக்கங்கள்
நம்முடைய ஒட்டு மொத்த வாழ்க்கையும் புலன்களின் மீது கொண்டுள்ள நம்பகத்தன்மையை அடிப்படையாக கொண்டுதான் சென்று கொண்டுள்ளன. ஒருவேளை மற்றவர்களுக்கு பச்சை நிறத்தில் தெரியும் விஷயங்கள் நமக்கு நீல நிறமாகவும், நீல நிறமானது பச்சை நிறமாகவும் தெரிந்தால் இறுதி வரை நாம் பச்சை நிறத்தை நீல நிறமென்றே நம்பி கொண்டுதான் வாழ்ந்து கொண்டிருப்போம்.
எத்தனை பேர் அப்படி வாழ்ந்து கொண்டுள்ளோம் என்பதும் தெரியவில்லை. 😁. இந்த நிலையில் வாழ்க்கையில் எவ்வளவோ விஷயங்களை தொடர்ந்து நாம் பிரச்சனையாக பார்த்து வருகிறோம். ஆனால் உடல் உறுப்புகளே செய்யும் பிரச்சனைகளை அடிப்படையாக கொண்டு உருவான ஒரு கதைதான் காதுகள்.
அறிவியல் மற்றும் மாந்தீரிகம் என இரு வகையிலுமே கதையின் போக்கு அமைந்துள்ளது. நல்ல ஒரு குடும்பத்தில் நல்ல நிலையில் இருக்கும் கதாநாயகனுக்கு திடீரென ஒரு நாள் காதுகளில் தாமாகவே யாரோ உரையாடி கொண்டிருப்பது போல தோன்றுகிறது.
அதனை தொடர்ந்து அந்த பிரச்சனை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க அவரால் எதிலுமே நாட்டம் காட்ட முடியாமல் போகிறது. குடும்பமே பெரும் வறுமைக்குள் செல்கிறது. யாருமே பார்க்க முடியாத கடும் வறுமை. இந்த மாதிரி பிரச்சனை வரும் யாருமே மனநலம் பாதிக்கப்பட்டவராக எளிமையாக மாறிவிடுவார்கள்.
ஆனால் இவ்வளவு துயரங்களுக்கு நடுவிலும் கதாநாயகன் தாக்கு பிடிப்பது நமக்கெல்லாம் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறது. எவ்வளவு பெரிய பிரச்சனை வந்தாலும் வாழ்ந்தாகவேண்டிய சூழல்தான் மனித மனதுக்கு தேவையானதாக இருக்கிறது.
மனைவியோடு கூடுவதை கூட அவர் வெறியோடு செய்யும் அளவிற்கு அவருக்கு மண்ட கோளாறு கொடுக்கின்றன. இந்த குரல்கள். இந்த நிலையில் தொடர்ந்து குழந்தை பேறு என இருப்பதால் ஒரு கட்டத்தில் நடக்கவே முடியாதப்படிக்கு மோசமான நிலையை எட்டுகிறார் மனைவி. சொல்லப்போனால் மொத்த புத்தகத்திலும் கதாநாயகனை விட கஷ்டப்படும் கதாபாத்திரமாக மூத்த மகளும், மனைவியும் இருக்கின்றனர்.
இதற்காக கதாநாயகனை வஞ்சிப்பதா அல்லது பாவப்படுவதா என்பதும் தெரியவில்லை. இவனால்தான் இந்த குடும்பத்துக்கு இவ்வள்வு பெரிய கஷ்டம் என்று பார்த்தால் இவன் தனக்குள்ளேயே பெரும் கஷ்டங்களை பெற்று கொண்டு வருகிறான்.
இது ஒரு வியாதி அவன் நினைக்கவே இல்லை. அவன் ஒரு முருக பக்தன். அவனை சோதிப்பதற்காக காளி அவனை தொடர்ந்து தொல்லைப்படுத்தி வருவதாகவே அவன் கருதுகிறான். தொடர்ந்து அவன் காதுகளில் ஆபாசமாக பேசி வரும் காளி ஒரு கட்டத்தில் அவனுக்கு முன்பு காட்சி அளித்து தன்னை திருமணம் செய்துக்கொள்ளும்படியும் தன்னுடன் கூடும்படியும் அவனை நிர்பந்திக்கிறது.
அதனை தொடர்ந்து அவரது கண்களும், மூக்கும் கூட ஏமாற்ற துவங்குகின்றன. இவ்வளவு பிரச்சனைகளையும் சமாளித்து அவர் வாழ தொடங்குகிறார். அப்படியாக கதை நிறைவுறுகிறது.

Comments
Post a Comment